23. காரைக்கால் அம்மையார் (பேயார்; புனிதவதியார்)


ஒருவன் பெறற்கரிய பெண்மகளைப் பெறுதல் முன்னைத் தவத்தாலெய்து ஒன்றாம். ஒரு குடிக்கு ஒரு குடியாய் அமைந்தபோது, வதுவை முடிந்தபின், அப்பெண் தன் நகரத்திலேயே, தந்தை தனம் பெருகக் கொடுத்து தனிக்குடிவாழ்க்கை அமையச் செய்வது, முன்னாளில் வாழ்ந்த வணிகர் மரபு. மனையறத்தில் வழது ஒழுகும் பெண்கள், தம் மனைகட் செல்லும் சிவனடியார்க்கு அமுதளித்தல், வேண்டும் பொருள்கள் அளித்தல் முதலியன ஆற்றி, சிவநெறியில் நின்றார்கள். ஒருவரிடத்தில் குறை வேண்டுவோர், மாங்கனி முதலிய இனிய பதார்த்தங்களை கையுறையாகத் தந்து, தம் குறை தீரப் பெறுதல் முன்னாளில் நிலவிய வழக்கு. சிவனடியார் தம்கட் பசியணைந்தால், அவர் பசியை விரைவில் தீர்த்தல் இல்லக் கிழத்தியின் கடன். அவர் வந்த வேளையில் கறியமுது முதலியன அமையாவிடின், கனி முதலியவற்றுடன் திருவமுது அளித்து விரைவில் அவர் பசி தீர்த்தல் பெரும் பேறும், புண்ணியமுமாம். சிவனடியாரை ஊட்டும் உணவு இறைவன் உண்டதற்கு சமமாகும். கணவன் வினவிய வினாவிற்கு உண்மை பேசாது விடுதல் கற்பு நெறிக்கு மாசு. எல்லாம் சிவனிடத்தே ஒப்புவித்த அன்பு நிலையில் உண்டார்க்கு நேரும் துன்பக் கவலைகளை இறைவன் தாமே தாங்கி நிற்பர். மனைவியை வஞ்சித்து, கணவன் நீங்கிச் சென்றால், சிவச்சார்பே சார்பாக வாழுதல் பெண்ணின் இயல்பு (திலகவதியார், சடங்கவி சிவாசாரியார் மகளார் போல). சிவபூதங்களின் வடிவமாகிய பேய் வடிவு உயர்வடையது. ஆனந்த மயமானது. இறைவர் திருக்கூத்தாடும்போது ஆடியும், பாடியும் மகிழ்ந்து வருவதற்கு இயைபுடையது. புண்ணியத் தலங்களையும், பேரருளாளர்களின் திருவடிகள் தீண்டபெற்ற புண்ணிய தலங்களையும் தம்கால்களால் மிதித்ததற்கு அஞ்சுவர்.


                  *                                                              *                                                              *

பழம் பெருமையும், சிறப்பும் நிறைந்த சோழநாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரத்திலே உள்ள ஒரு துறைமுகப் பட்டினம் காரைக்கால் என்பது. என்னுமொரு பழம்பெரும் துறைமுகப் பட்டினம் நாகபட்டினம் என்பது.

காரைக்காலில் பதியெழுவறியாப் பழங்குடி வணிகப் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராய் இருந்தவர் தனதத்தனார் என்னும் செல்வர். அவர் சிவபக்தி முதலியவற்றில் சிறந்து விளங்கினார். அவர் செய்த தவப் பயனாய் திருமகளே வந்து அவதானெனும்படி ஒரு பெண் குழந்தை அவதரித்து. அக்குழந்தைக்கு புனிதவதி என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்து வளர்த்தனர். பெயருக்கு ஏற்ப புனிதவதியாரும் இளம் வயதிலேயே சிவபெருமானையும், சிவனடியாரையும் பற்றிச் சிந்தித்தும், பேசியும் புனித வாழ்வு வாழ்ந்தார்.

நாகபட்டினத்தில், பல்வகைப் பெருமையோடும், செல்வத்தோடும் புகழ்பூத்து வாழ்ந்தவர் நிதிபதி என்னும் பெருவணிகர் பெருமகன். அவருக்கு பிள்ளையாய் பிறந்தவன் பரமதத்தன் என்னும் பெயர் பூண்ட குலமைந்தன்.

ஒத்த குலங்கோத்திரத்தில் பிறந்து, கரைக்காலிலே வாழ்ந்துவந்த தனதத்தனின் திருமகளாகிய புனிதவதியாரை, அவர் மணப்பருவம் அடைய, மணங்கேட்டுச் சென்ற பெரியோர்கள், பரமதத்தன் புனிதவதியாரை மணம்செய்ய இசைந்தனர்.

பெற்றோர் தங்களது மரபுக்கு ஏற்ப, தாதவிழ்த்தார் காளைபோன்ற பரமதத்தனுக்கு, தளிர்அடிமென் நகைமயில் போன்ற மயிலனையாள் புனிதவதியாரை கடிமணம் செய்துவைத்து, அவர்கள் நலங்கண்டு மகிழ்ந்தனர். நிதிபதியும் உயர்ந்த சிறப்பு பெற்றனன்போல் வதுவை வினைசெய்து அமைவித்தான்.

புனிதவதியார் தமக்கு ஒரே குழந்தை ஆதலின், அவர் தம்மோடு வாழவேண்டும் என்று விரும்பி, காரைக்காலிலே ஒரு மடம் சமைத்து, அவர்களை அங்கே இருந்துகொண்டு இல்லறம் நடத்தக் கண்டு மகிழ்ந்தார் தனதத்தனார்.

பரமதத்தன் புனிதவதியாரை திருமணம் செய்து, அவரோடு இல்லறம் இனிது செல்லும்போது, ஒரு மாங்கனியால் விளைந்த வினையால் பிரிந்து வாழ்ந்தன்.

காரைக்கால் அம்மையார் இறைவருடைய திருவடிகளிலே, அவர் எண்டோள் வீசி அண்டமுற ஆடும்போது, தாளம் போட்டு, அவரடியான் கீழ் பாடிக்கொண்டிருக்கிறார். இதனை கோவில்களில் உள்ள திருமேனியில் காணலாம்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வணிகர்
நாடு : சோழநாடு
ஊர் : காரைக்கால்
குருபூசை / திருநாள் : பங்குனி - சுவாதி

ஒரே பார்வையில் ...
சிவனடியார் பத்தியிற் சிறந்து, மாகேசுர பூசை செய்யும் கடப்பாடுடையர். ஒருநாள் சிவனடியாருக்கு கணவன் தந்த மாம்பழத்தை கறியமுது ஆகாமையால், அமுதுடன் படைத்தார். கணவன் அப்பழத்தைக் கேட்டபோது, சிவபெருமானை வேண்டிப் பெற்றுக் கொடுத்தார். பேய் வடிவம் பெற்றுத் திருக்கயிலைக்கு தலையாலே நடந்து சென்று, சிவனைத் தரிசித்து, ஆலங்காடு திரும்பி, ஆடல் கண்டவர்.

அற்புதத் திருவந்தாதி (காரைக்கால் அம்மையார்) பண் : இந்தளம்
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்
எவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவமேது.